*உங்கள் மின் இணைப்பு ஆதாருடன் இணைக்கப்பட்டதை சரி பார்ப்பது எப்படி?*
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, நவம்பர் 28-ம் தேதி முதல் மின் நுகர்வோர் அனைவரும் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து வந்தனர்.
இணையதளம் மட்டுமின்றி, மின்வாரிய அலுவலகங்களிலும் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்றது. இதற்காக, தமிழகம் முழுவதும் மின்வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. மேலும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மின்வாரியம் https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற புதிய இணையதள முகவரியை அறிமுகம் செய்தது.
முதலில் டிசம்பர் 31-ம் கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இதற்கான கால அவகாசம் ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது வரை மின் இணைப்பு எண்ணுடன் 2.26 கோடி ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளன. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க 31-ம் தேதி கடைசி நாள் ஆகும். இதன்படி ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்க இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளன. இந்நிலையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதை சரிபார்க்கும் வசதியை மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது.
இதன்படி https://www.tnebltd.gov.in/BillStatus/billstatus.xhtml என்ற இணையதளத்தில் தங்களது மின் இணைப்பு எண் மற்றும் மொபைல் எண்ணை அளித்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ளலாம்.