ஓய்வுபெறும் நிலையில் தலைமைசெயலாளராக *மாணவர்கள் நலன் சார்ந்த இறுதி கடிதம்* இன்று பிற்பகல் பணிஓய்வு பெறுகிறார் இறையன்பு.. இப்படிப்பட்ட சூழலில், பள்ளிக் கல்வி இயக்குநர் க.அறிவொளிக்கு இறையன்பு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.. அந்த கடிதத்தில், பள்ளி மாணவர்களுக்கு இறையன்பு ஒரு அறிவுரை தந்துள்ளார்..
அதாவது, பள்ளி மாணவர்களுக்கு, புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் குறைந்து வருவது குறித்தும், பொது அறிவு தொடர்பான செய்திகள் அவர்களுக்கு அதிகமாக தெரிவதில்லை என்பது குறித்தும், தன்னுடைய வேதனையை வெளிப்படுத்தி, இதற்கு தீர்வாக ஒரு ஆலோசனையும் இறையன்பு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த கடிதத்தில், "மாணவர்கள் மின்னணு உபகரணங்களில் அதிகமாக வாசிப்பதால், புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் வெகுவாக குறைந்து வருகிறது... இதனால் பொது அறிவு தொடர்பான செய்திகள் அவர்களுக்கு அதிகமாக தெரிவதில்லை.. வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு பள்ளியிலும் வாசிப்போர் மன்றம் ஏற்படுத்த வேண்டும்.. அதில் மாதந்தோறும் மாணவர்கள் தாங்கள் படித்த புத்தகங்களைப் பற்றி பேசுவதற்கு வாய்ப்புகள் வழங்கலாம்.
இதன்மூலம் வாசிப்பு மேம்படுவதுடன் தகவல் தொடர்பிலும் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள்... சிறந்த முறையில் நூலை மதிப்புரை செய்யும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குவதோடு, இதில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் நல்ல புத்தகங்களை தந்து ஊக்குவிக்கலாம்" என்று பள்ளிக் கல்வி இயக்குநருக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முக்கியத்துவம்: இறையன்புவை பொறுத்தவரை மாணவர்களையும், இளைஞர்களையும் அதிகமாக நேசிப்பவர்.. அவர்களை தன்னுடைய எழுத்திலும், பேச்சிலும், எந்நேரமும் ஊக்கப்படுத்திக் கொண்டேயிருப்பவர்.. ஒரு நேர்மையான அரசு அதிகாரியாக திகழ்ந்து, அதை செயலிலும் காட்டி வருபவர்.. இதனால், இளைஞர்களுக்கு, தங்களை முன்னெடுத்து நல்வழிப்படுத்தும் ஹீரோ"வாகவே அவர்கள் மனதில் தங்கியும் விட்டவர்..
இந்நிலையில், பள்ளி மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் விதமாக புதிய திட்டம் ஒன்றை முன்னெடுக்கவேண்டும் என்று பள்ளிக் கல்விக்கு ஆலோசனை தந்துள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.